Monday, August 4, 2008

சிந்தனைத்துளிகள்.

1

சந்நியாசியையும், சண்டாளனையும் ஒன்றாகவே பார்க்கும் பக்குவம் ஒருவனுக்கு வரவேண்டும்.
2

மரபணு இயல்பாகவே சுயநலத்தோடு செயற்படுவதால், அதனைப்பற்றிய பல செய்திகள் ( selfish gene ) வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. சமூக இயல் அறிஞர்கள் 'சுயநலக்கார மரபணு'வினால் தலைமுறைக்குத் தலைமுறை மனித இனத்திடையே சுய நலம் அதிகமாகி, பொருளாதார, சமூகக்கோட்பாடுகள் நிலை தடுமாறிவிடுமோ என்றஞ்சும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இது பற்றிப்பல புத்தகங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி இந்த அளவுக்குக் கவலைப் படத்தேவையில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில்,

அ) சுயநலக்கார மரபணுவினால் அப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்குமானால், எத்தனையோ தலைமுறைக்கு முன்னரே தாயுக்கும், பிள்ளைக்கும் இடையே உள்ள பாசம் மறைந்து அல்லது குறைந்து போயிருக்க வேண்டும். ஆனால், அப்படியாகவில்லை.
ஆ) பிறந்த குழந்தையைப் பார்க்கும் எவரும் அது தாய் அல்லது தந்தையின் குணத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுவதில்லை. முகத்தைக் கொண்டிருக்கிறது என்று சொல்வதுண்டு. மரபணு உடலைப் பாதிப்பதைப் போல் உள்ளத்தைப் பாதிப்பதில்லை.

இ) இரணியனுக்கு எப்படி பிரகலாதன் பிறந்தான்? கம்சனுக்கு எப்படி கிருஷ்ணன் மருகனாகப் பிறந்தான்? உத்தமியாகிய காந்தாரிக்கு நூறு பாவிகள் எப்படிப் பிறந்தனர்? இங்கேயெல்லாம் மரபணு எங்கே போயிற்று?

மனித இனத்தின் இயல்பு அன்பு/தயை; அதை மரபணுவால் மாற்றமுடியாது.

3

எந்த ஒன்று முழுமையாக இல்லையோ அந்த ஒன்று முதன்மையாக இருக்க முடியாது.
4

அறிவு பல வகைகளில், துறைகளில் பரவி நிற்கிறது. ஒருவன் எத்துனைத் துறைகளில் சிறந்த அறிவு பெற்றிருப்பினும் அவன் முக்கியமாகத் தெரிந்துகொண்டிருக்க வேண்டிய செய்திகள் இரண்டு;
1. நான் யார்?
2.நான் என்ன செய்ய வேண்டும்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை;
1. இப்பிரபஞ்சம் முழுதும் பரவி நிற்கும் மகா சக்தியில் நான் ஒரு துகள்.
2.எத்துனைப் பிறவி எடுப்பினும் அத்துனைப் பிறவியிலும் என் கடன் பணி செய்து கிடப்பதே.
5

மனித வாழ்க்கையின் குறிக்கோள் மகிழ்ச்சி. நேற்று அனுபவித்த மகிழ்ச்சியைக்காட்டிலும் நாளைக்கு ஒரு சிறிதேனும் அதிக மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்ற மனிதனின் ஆசை அல்லது பேராசையே , எடிசன், பெல்,மார்க்கோனி, ஐந்ஸ்டின், டால்ஸ்டாய், காந்தி, மண்டேலா,தொல்காப்பியர், வள்ளுவர், கல்கி, ஜெயகாந்தன், சிவாஜி கனேசன், பத்மா சுப்ரமணியம் போன்றோரின் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் காரணம். மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சிக்கெல்லாம் உந்துசக்தியாக இருந்து செயல்படுவது இந்த ஆசை/பேராசையே.
6

”விதியையும் மதியால் வென்றிடலாம் என்பது தவறு; விதியை அருளால் மாத்திரமே வெல்ல முடியும்” என்பது ஆன்மீக வாதிகளின் வாதம். ”அருளைப் பெறுவதற்கும், அதற்காக ஆண்டவனை உணர்வதர்க்குங்கூட ஓரளவேனுமாகிலும் மதி தேவையே” என்பது பகுத்தறிவாளர்களின் வாதம்.

7

இறையன்பின் வழிநடத்தல் இருக்கும்போது, கொஞ்சமும் முணுமுணுக்காமல் அதன் கையை இறுகப் பற்றிக்கொண்டு
அதனோடு நட.
இறை இட்ட ஆணையை நிறைவேற்றும்போது, முழுமையாக உன்னை அர்ப்ப ணித்துக்கொள். திறமையாகச்செய்; முழுமையாகச்செய்; சீராகச்செய்; நேராகச்செய்; உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செய். பலனை எதிர் பார்க்காதே.

8

குழந்தைகள், பார்த்து, கேட்டு, சிந்தித்து தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுகின்றன. பார்ப்பன யாவும் தாய் மண்ணிற்குச் சொந்தமானவை; கேட்பவை யாவும் தாய் மொழியில்; ஆகவே, பார்த்தனவற்றையும், கேட்டனவற்றையும் அக்குழந்தை சிந்திக்கும்பொழுது தாய் மொழியிலேயே சிந்திக்கிறது. ஒரு குழந்தை எம்மொழியில் சிந்திக்கிறதோ அம்மொழியிலேயே அதன் சிந்தனைத்திறன் வளர்கிறது. சிந்தனைத்திறன் எம்மொழியில் வளர்ந்திருக்கிறதோ அம்மொழியிலேயே கல்வி புகட்டப்படல் வேண்டும். அம்மொழி தாய் மொழியே. இதை unesco உறுதி செய்திருக்கிறது.

ஆகவே, தாய் மொழியில் கற்பிக்கப்படும்போது, செய்திகள் வேகமாக, சீராக உள்வாங்கப்படுகின்றன; கல்வி (அறிவியற்கல்வியாக இருப்பினும்) முழுமையானதாகிறது. “ வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்ற அவ்வையின் வாக்கு unescoவின் கண்டுபிடிப்புக்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது.

9

தனிமனித உரிமைகளுக்காகப் பரிந்து பேசும் சாசனங்களும் சட்டங்களும், பிச்சையெடுப்பவனைத் தண்டிக்கின்றன.
தனி மனிதனுக்காக ‘ பரந்து கெடுக உலகியற்றியான் ‘ என்று பரிந்து பேசும் வள்ளுவன் ‘ இளைதாக...கொள்க ‘ என்று வெகுண்டெழுகிறான்.
தனி மனிதனுக்காக 'ஜெகத்தினையழித்திடுவோம்' எனப் பரிந்து எழும் பாரதி ''அவன் முகத்தில் உமிழ்ந்துவிடு; மோதி மிதித்துவிடு ‘ என்றும் கூறுகிறான்.
இந்த முரண்பாட்டுக்குக் காரணம், வள்ளுவரும் பாரதியும், ஒருவனை, ஒரு சமயத்தில் தனி மனிதனாகவும், மற்றொரு சமயத்தில் (சமூகப் பொறுப்புள்ள) சமூகத்தின் அங்கத்தினனாகவும் பார்த்தார்கள். தனிமனிதனின் உரிமையை சமூக நியாயங்கள்/தர்மங்கள் கட்டுப்படுத்தும்; மட்டுப்படுத்தும்.

10

We do not want anymore Thiruvalluvars to preach. But,
We want many more Vivekanandas to act.

11

தமிழன் கண்ட தத்துவரீதியான உண்மைகள் சிந்திக்குந்தோரும் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. நமது இலக்கியங்களில் காணப்பெறும் கதாபாத்திரங்கள் மனிதர்களாக மாத்திரமின்றி, விலங்குகளாகவும், பறவைகளாகவும், ஊர்வனவாகவும், மண்ணாகவும் மலையாகவும், நீராகவும் நெருப்பாகவும், காற்றாகவும் விண்ணாகவுங்கூட உள்ளன. தமிழனின் சிந்தனை காலத்தைக்கடந்ததாகவும் , இடத்தைக் கடந்ததாகவுமின்றி தன்னையே கடந்ததாகவும் காணக் கிடைக்கிறது. அவனது சிந்தனை பிரபஞ்சப்படுத்தப்பட்ட சிந்தனை. இத்தகைய சிந்தனை வேறெந்த இனத்திலும இருக்கிறதா என்பது சந்தேகமே. அப்ப்டியே இருப்பினும் இத்தனை ஆழத்திலும் அகலத்திலும் இருக்கும் என்று தோன்றவில்லை.

12
கடவுள் நித்தியமானது. மனிதன் அநித்தியமானவன். ஆனால், நித்தியமான கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் அநித்தியமாக இருக்கும்போது, அநித்தியமான மனிதனால் படைக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளாகவும், எகிப்தின் பிரமிட் மூவாயிரம் ஆண்டுகளாகவும் நித்தியமாயிருக்கின்றன. எனவே, எது நித்தியம்? எது அநித்தியம்?

மனிதன் உயிருள்ள ஜீவராசி; கல்லும் மண்ணும் உயிரற்ற ஜடப்பொருள்கள். நிலக்கரி என்ற ஜடப்பொருளை உபயோகித்து மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதை ஒரு பேஸ் மேக்கரில் அடைத்து இதயத்திர்க்கருகில் வைத்து விட்டால், உயிரை விட இருக்கும் நோயாளி பிழைத்துக்கொள்ளுகிறான். எனவே எது உயிருள்ளது? எது உயிரற்றது?

இக்கேள்விகளுக்கெல்லாம் விடையாயமைவது,எல்லாப் பொருட்களும் உயிருள்ளவையே;எல்லாப்பொருட்களும் நித்தியமானவையே; என்ற பொருளில் வரும் கீழ்க்கண்ட தொடர்கள்:

யாதுமாகி நின்றாய் காளி......”

”உலகம் யாவையும் தாமுளவாக்கலும்........”

எங்கெங்கும் காணினும் சக்தியடா........”

The creator Himself is creating, preserving and destroying The universe-.விவேகானந்தா.

இவை மெய்ஞ்ஞானிகளின் கூற்று.

விஞ்ஞானிகளும் இதையே கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்.

Every Matter in this universe is made out of the fundamental substance 'sub atomic particle'

Every Matter is energy.

Energy cannot be destroyed; Neither it could be created; it could only be transformed.

13

when one believes in such a thing, one feels secure in life... (Sigmund Freud)
ஆண்டவன் மேல் வைக்கும் நம்பிக்கை, லோகாயத வாழ்க்கையில் நமக்கு,நம்பிக்கையும், தெளிவும், பயமின்மையும் உண்டாகக்காரணமாயிருக்கிறது

14

Mathematicians group zero and infinity under the title "indeterminates". zero is among numbers, smaller than the smallest and infinity is bigger than the biggest. the mathematicians will not accept the process of addition of zero and infinity as both are entities whose values are unknown. Therefore no mathematical equation is possible with indeterminates.

But in spiritualism Zero merges with Infinity to become infinity. The merger happens as explained below:
When a (wo)man surrenders all his belongings ( phisycal, mental and spiritual) to the Infinity ( or The Almighty ), unconditionally, in the process of renunciation, (S)He becomes an ABSOLUTE Zero, whereby, his faculty of "differentiating" becomes extinct. On surrender to the Almighty, the Zero merges with Infinity to become Infinity. What a great fallacy to the mathematicians?

The truth that "bigger than the biggest" and "smaller than the smallest" are one and the same is evident from the saying by Vivekananda " IT is Anu at micro level and Vibhu at macro level "

”ஒவ்வொன்றாகச் சேர்த்தால் உலகம்.ஒவ்வொன்றாகப்பிரித்தால் தனி. ஒவ்வொரு தனியும் உலகத்தின் கூறே.”---பெரும்புலவர் இளங்குமரனார்.

”பெரிதினும் பெரிதாய் சிறிதினும் சிறிதாய்”--வள்ளலார்.



ஜீவராசிகளின் தொகுப்பு இப் பிரபஞ்சம். பிரபஞ்சத்தின் பகுப்பு ஜீவராசிகள்.
15

தர்மம் தர்மம் என்று தர்மசிந்தனையிலேயே லயித்திருப்பதும்கூட நம்மை நாமே ஒரு கட்டுறு மனப்பாங்கினுக்குள்ளே வைத்திருப்பதேயாகும். ஒரு நல்ல சிந்தனையிலிருந்தாலும், அதிலிருந்து விடுபடாமல், அதற்குள்ளேயே உழன்றுகொண்டிருப்பது ஒரு ”கட்டுறு” மனப்பாங்கே.
இந்த கட்டுறு மனத்தில் நிலைத்திருப்பது நல்ல சிந்தனையேயானாலும், இம்மனப்பாங்கு ஒரு தங்கத்தாலான அழகான சிறைக் கூண்டே.

மனிதனின் ஆத்மா கட்டுக்களை அவிழ்த்துக்கொண்டு இக்கூண்டிலிருந்து விடுபட்டு, பேரானந்தப் பெருவெள்ளத்தை நோக்கி, எல்லையில்லா இம் மோனப்பெருவெளியில் சிறகடித்துப் பறக்கும்போதுதான் தன்னை இப் பிரபஞ்சத்தோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளுகிறது. தானும் இப்பிரபஞ்சமும் வேறல்ல; ஒன்றே என்று உணரும் இந்நிலைதான் ”சந்நியாஸ்.”
சந்நியாசம் என்பது விரக்தியின் விளைவல்ல. பேரானந்தத்தில் முகிழ்ப்பது.
(காண்க: திரு. இறையன்பு. அவர்களின் “சந்நியாஸ்” என்ற சிறு கதை; கேட்க: சுவாமி நித்யானந்தரின் பேச்சு. பார்க்க: “சோவி”ன் எங்கே பிராமணன்?)
16

ஒரு மனிதன் கருவில் உருவான நாள் முதல் இறக்கும் நாள் வரை உள்ள காலத்தை வாழ்க்கை அல்லது வாழ் நாள் என்று கணக்கிடுகிறார்கள். இந்த கால கட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு மணித்துளியாகவும் இருக்கலாம் அல்லது ஒரு நூற்றாண்டாகவும் இருக்கலாம். அதன் அளவு ஒருவருக்கும் தெரியாது; அனுமானிக்கவும் முடியாது. வாழ்க்கையின் கால வரம்பு நிலையற்றதாக இருக்கிறது. ஒரு மனிதன் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம். ஆகவே வாழ்க்கை நிலையற்றது என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். நிலையாமை என்பது வேறு; இல்லாமை என்பது வேறு, ஒரு மணித்துளி வாழ்ந்தவனுக்கும் வாழ்க்கை இருந்தது. நூறாண்டுகள் வாழ்ந்தவனுக்கும் வாழ்க்கை இருந்தது, ஆனால், இருவருக்குமே முடிவு எப்போது வரும் என்று தெரியாமலே இருந்தது; அதாவது நிலையாமை இருந்தது.
ஆகவே, வாழ்க்கையில் நிலையாமை இருந்தாலும், ஒருவனுக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை அவன் வாழ்ந்தே ஆகவேண்டும். தற்கொலை செய்துகொள்ள முடியாது,
25 வருட வாழ்க்கையை அவன் பிரம்மச்சாரியாகக் கழிக்க வேண்டும். மீதமிருந்தால், அடுத்த 25 வருட வாழ்க்கையை அவன் கிருஹஸ்தனாகக் கழிக்க வேண்டும். மேலும் மீதமிருந்தால் அடுத்த 10 வருட வாழ்க்கையை வானப்பிரஸ்தனாகக் கழிக்க வேண்டும். எஞ்சியிருந்தால் மீதமுள்ள வாழ்க்கையை சந்நியாசியாகக் கழிக்க வேண்டும்.
இப்படி வாழும் நான்கு நிலைகளில் கிருஹஸ்த வாழ்க்கையே சிறந்தது. ஏனெனில், பிரம்மச்சாரிக்கும், வாணப்பிரஸ்தனுக்கும், சந்நியாசிக்கும் சோறு போட கிருஹஸ்தனால் மட்டுமே முடியும். கிருஹஸ்தன்( இல் வாழ்வான் ) இல்லாவிட்டால், மற்ற மூவரும் இல்லை. இதனையே, வள்ளுவர்,
”இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.”-----என்றார்.

17
ஒருவருக்கு உதவி தேவைப்படும்போது பதறித் துடித்துப் போய் உதவுகிறேன். நாளைக்கு நாம் என்ன செய்வோம் என்ற எண்ணமே இல்லாது உடனடியாகப் போய் உதவுகிறேன். அப்படி என்னிடம் உதவியைப் பெறுகிறவர்கள் என்னை உதாசீனப் படுத்தியவர்களாயும், கேவலமாகப் பேசியவர்களாயும் கூட இருக்கிறார்கள். ஆண்டவன் ஏன் என்னை அப்படிப்பட்டவர்களிடம் அழைத்துச் செல்கிறான் என்று நினைத்துக் குழம்பும்போது என் உள் மனத்துள் ஒரு ஒலி கேட்கிறது. அந்த ஒலியை உற்றுக் கேட்டால் அது “ யார் தருவார் இந்த அரியாசனம்” என்ற டி எம். சவுந்தர ராஜன் பாடலாக இருக்கிறது. என்னை உதாசீனப் படுத்தியவர்களுக்குக் கூட உதவி செய்யுமாறு பணிக்கும்போது ஆண்டவன் எனக்கு ஒரு சிறந்த அரியாசனத்தைத் தந்தருளுகிறான் என்பதுதான் அப்பாடலின் பொருளா???

18
Your Life is a gift from the creator
Your gift back to the creator is what you do with your life.----Billy Mills
19
மனிதன் எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றை கடவுளாகக் கண்டான். இருள் எங்கும் நிறைந்திருக்க இயலாது. ஒளியே அல்லது சோதியே எங்கும் நிறைந்திருக்கும் தன்மையுடையது. எனவே எங்கும் நிறைந்த பரம்பொருளை சோதியாக வணங்கினான்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி--மாணிக்கவாசகர்.
அருட்பெருஞ்சோதி-----வள்ளலார்.

20
“தாமுள வாக்கலும்......”
”உலகம் யாவையும் தாமுளவாக்கலும்.............” ( கடவுள் வாழ்த்து )
”என்றுமுள தென் தமிழை இயம்பி இசை கொண்டான்” ( அகத்தியப் படலம் )
“உள” என்னும் சொல், இராமயணத்தில் ஒரு இடத்தில், ‘இருப்பி’ன் ஒரு சிறப்பான குணத்தைக் குறிக்க, “என்றும்” எனும் அடைமொழியுடனும், வேறொரு இடத்தில், வேறொரு பொருளைக் குறிக்க ”தாம்” எனும் அடைமொழியுடனும், உபயோகப்படுத்தப்படுகிறது.
கடவுள் வாழ்த்துப் பாடலில் “தாம் உள” என்றும், அகத்தியப் படலத்தில், “என்றும் உள” என்றும் கம்பன், உபயோகப் படுத்தியிருக்கிறான்.
கடவுள் வாழ்த்துப் பாடலில், “தாமுளவாக்கல்” என்ற சொற்றொடர், நாமெல்லோருக்கும் -- ஏன்? -- இப் பிரபஞ்ச முழுமைக்குமே “தலைவராக” இருக்கும் பரம்பொருளின், நீண்ட விளையாட்டின் ஒரு பகுதியைக்குறிக்க வருகிறது.
இப்போது பரம்பொருளின் விளையாட்டைப் பார்ப்போம்.
ஒரு சிறு குழந்தை,( பரம்பொருளைப் போலவே ), கடற்கரையில், ஈரமணலில் வீடு கட்டி விளையாடுகிறது. முதலில், முழுக் கவனத்துடன் வீட்டைக் கட்டுகிறது. கட்டிய வீட்டை, அலையோ அல்லது பிற குழந்தைகளோ வந்து கலைத்து விடாமல், காப்பாற்றுகிறது. சுற்றிச் சுற்றி வந்து தன் வீட்டின் அழகில் லயித்துப் போகிறது. அவ்வீட்டைக் கட்டிய குழந்தை, கட்டிய போதும், கட்டி முடித்தபோதும், தானே அவ்வீடாகவும், அவ்வீடே தானாகவும் இருக்கும்படியாக அக் கட்டட வேலையில் தன்னை மறந்து போகிறது. அம்மணல் வீட்டை யாரேனும் அழித்து விட்டால், அச் செயலால் தானே அழிந்து போனதாகக் கருதுகிறது. தான் வேறு அந்த மணல் வீடு வேறு என்று அக் குழந்தை கருதுவதில்லை. அக் குழந்தை மணல் வீட்டுக்கு வெளியே இருந்தாலும் அதன் உயிர் அவ்வீட்டிற்கு உள்ளேதான் இருக்கிறது.அதாவது அக்குழந்தை “தாமுளவாக” அவ் வீட்டை “ஆக்கி”யிருக்கிறது. அக்குழந்தையின் செயலாக்கம் “தாமுளவாக ஆக்கல்”.
தான் ஆக்கிய அந்த மணல் வீட்டை, யாராலும் அழிந்து போகாமல் காப்பற்றும்போது, அக் குழந்தையின் அக்கறை நமக்குப் புரிகிறது. அலையினால் வீடு அழிந்து விடுமோ என நினைக்கும்போது பதறி விடுகிறது. அவ்வீடு என்றும் “நிலை பெற்றி”ருக்க வேண்டுமென நினைக்கிறது.
ஆனால், சிறிது நேரம் அவ்வீட்டையே பார்த்துக் கொண்டிருந்த குழந்தை, என்ன நினைத்தோ அவ்வீட்டைத் தன் கால்களாலேயே இடறி அழித்து “நீக்கி” விடுகிறது.
”நீக்கிய” வீட்டை, அதே மணல் கொண்டு மறுபடியும் “ஆக்கு”கிறது.
இப்படியே, ஆக்கலையும், நிலைபெறுத்தலையும், நீக்கலையும் ஒரு சுழற்ச்சியில் மறுபடியும், மறுபடியும் செய்துகொண்டே இருக்கிறது.
இப்போது மாலை மறைந்து இரவு வரப்போகிறது. பெற்றோர் அக்குழந்தையை அழைத்தால், அது வீட்டிற்கு வர மறுக்கிறது. குழந்தையின் மனம் விளையாட்டில் ஒன்றிப்போயிருக்கிறது. அவ்விளையாட்டு அதன் மனத்தை எவ்வளவு ஆழத்திற்கு ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது? அந்த ஆக்கிரமிப்பின் நீள, அகலங்கள் எவ்வளவு? என்று எவராலும் அளந்தறிய இயலாது. இந்த முப்பரிமாணங்களையும் அளக்க எந்த அளவு கோலும் அல்லது ‘அலகு’ம் இல்லை. இப்பரிமாணங்களுக்க்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த ஆக்கிரமிப்பு. எனவே இவ்விளையாட்டு ”அலகிலா” விளையாட்டு. இவ்விளையாட்டிலிருந்து, குழந்தை வர (நீங்க) மறுப்பதால், இது ஒரு ”நீங்கலா” விளையாட்டு. அதாவது, இது ஒரு ‘நீங்கலா அலகிலா விளையாட்டு’.
இதைப் போன்றதே, ”நாங்கள்” “சரண்” அடைந்திருக்கும் “தலைவர்” அவர்களின் விளையாட்டும்.
உலகம் என்னும் சொல் நாம் வசிக்கும் இந்த உலகை மட்டுமே குறிப்பதாயின், இப் பிரபஞ்சம் பல உலகங்களைக் கொண்டதாகும். ( solar systems, milky ways and their galaxies ) இதனையே,
உலகம் யாவையும் என கம்பனும்,
உலகெலாம் என சேக்கிழாரும்,
பல உலகும் என சுந்தரம் பிள்ளையும் கூறுகிறார்கள்.
நம் தலைவனாகிய பரம்பொருள், இவ்”வுலகம் யாவையும்”,( அங்கே வாழும் ”பல்லுயிர்களை”யும் ) தாமே உளவாக ஆக்கினான். அதாவது தன்னால் படைக்கப் பட்ட உயிரிகள் அனைத்திலும் தானே இருந்தான்; இருக்கிறான்.
The creator created all his creations
In such a way that
The creator himself was within all his creations.
என்று ஆங்கிலத்தில் கூறலாம்.
The creator himself is creating, preserving and destroying என்று விவேகானந்தர் கூறுகிறார். அவன் ஆக்கலையும், நிலைபெறுத்தலையும், நீக்கலையும் நீங்கலா அலகிலா விளையாட்டாக விளையாடுகிறான். அவன் இந்த அலகிலா நீங்கலா விளையாட்டிலிருந்து நீங்கினால்,( ”ஆடிய பாத”த்தை ஆடாமல் நிறுத்தினால் – ”தூக்கிய திருவடி”யைக் கீழே தரையில் வைத்துவிட்டால் ) பிரபஞ்சம் இயங்காது நின்று போகும்.
இவ்விளையாட்டைக் குறிக்கும் பாடலில், கம்பன் உபயோகப் படுத்திய ”தாமுள” என்ற சொற்றொடர் மிகவும் பொருள் பொதிந்தது. கடவுள் தன்னிலிருந்து மற்றவற்றைப் படைத்தான் என்று பைபிள் ( ”நானே என்றும் வழியாயும், சத்தியமாயும், ஜீவனுமாயுமிருக்கிறேன்” ) கூறுவதும், பிரஜாபதி தன்னிலிருந்து நால்வகை வருணத்தாரைப் படைத்தான் என்று ”இருக்கு” வேதம் கூறுவதும், ”யாதுமாகி நின்றாய்” என்று பாரதி கூறுவதும், ”உன்னுதரத்துதித்தெழுந்தே” என்று சுந்தரம் பிள்ளை உபமானமாகக் கூறுவதும், “எல்லாமுமாகி நின்றாய் நீயே” என்ற ஆன்றோர் வாக்கும் இந்தத் ‘தாமுள’ என்ற சொல்லில் பொதிந்து கிடக்கிறது.
கடவுள் வாழ்த்துப் பாடல், இராமவதாரக் காப்பியத்தில் இருந்தாலும், கடவுள் வாழ்த்துப்ப் பாடலில், கடவுளே கதாநாயகன்; இராமனல்லன். அவனது சிறப்பியல்புகளைப் பாடுதலே சிறந்தது. அதுவே மரபு. படைக்கப் பட்ட பொருட்கள் யாவினும் படைத்தவனே வாழுமாறு படைத்தலே, படைத்தவனுக்கும் படைக்கப்பட்ட பொருள்களுக்கும் பேதமில்லை என்ற உயர்ந்த சித்தாந்தக் கருத்தும், “என்று நீ, அன்று நான்” என்ற தாயுமானவரின் கூற்றும் நிலைப் பாட்டினை யடைய உதவும்; இறைவனுக்குச் சிறப்பையளிக்கும்.
எனவே, இப்படிப் பட்ட சிறப்புப் பொருளைத் தரும் வண்ணம், “தாம்’ என்ற அடைமொழியைச் சேர்த்தே ‘தாமுள’ என்ற சொற்ரொடருக்குப் பொருள் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அச் சொற்றொடரில் புதைந்து கிடக்கும் சிறந்த சிந்தனைகள் வெளிப்படும்.
குழந்தை கட்டிய மணல் வீட்டை இடித்ததன் பின், மறுபடியும் வீடு கட்ட அதே மணலைத்தான் உபயோகப் படுத்துகிறது. வீடு இடிந்தாலும் மணல் மறைய வில்லை. அம்மணல் ‘இருந்தபடி இருக்க’ அதே மணலிலிருந்து வேறு வீடு கட்டப்படுகிறது. ‘தாம்’ என்ற அடைமொழியை விடுத்து, ‘உள’ என்ற சொல்லை மாத்திரமே உபயோகித்து விளக்கம் சொன்னால், இல்லாத வீட்டை இருந்த மணலிலிருந்து கட்டியதாகக் கூறலாமே தவிர, இதனினும் மேம்பட்ட பொருளைக் கொள்ள இயலாது. ’தாமுள’ என்று கூறும்போதுதான் அக் குழந்தை தானே வீடாக மனத்தால் வாழும் வாழ்க்கை புலப்படுகிறது.

எந்த ஒரு செயலுக்கும் கர்த்தா, காரணம், கருவி, காரியம் என்ற நான்கும் உண்டு. இங்கு தாம் என்ற சொல்லுக்குறிய இறைவன் கர்த்தா. இப்பிரபஞ்சத்தை ஆக்கல் காரியம். இறையினது பேராற்றல் கருவி. காரணம் விளங்கவில்லை. காரியத்தின் பயனாகிய இப்பிரபஞ்சத்தினுள்ளே கர்த்தாவே இருக்கிறான் என்பதே கம்பன் சொல்ல வந்தது.
ஆக்கலுக்கு முன்னரே இருந்த உயிரிகளைக்குறிக்க (மணல்) கம்பன் ”என்றுமுள” என்ற சொல்லை அகத்தியப் படலத்தில் கூறியதைப் போல் உபயோகித்திருக்கலாம். அப்படி உபயோகித்திருந்தால், உயிரிகள் அநாதியானவை என்று மட்டுமே கூறலாமே தவிர, அவற்றை ஆக்கியவனே அவற்றினுள்ளே இருந்து இயக்குகிறான் என்ற பேருண்மை விளக்கப்படாமல் போயிருக்கும். என்றுமுள என்று கூறாமல் தாமுள என்று கூறியதனாலேயே ஆக்கப்பட்டவை அனைத்திலும் ஆக்கியவனே இருந்து இயக்குகிறான் என்னும் பேருண்மை வெளிப்படுகிறது.

எனவே ‘தாமுள’ என்று சொல்லாமல் ‘உள’ என்று மாத்திரமே சொல்லிப் பொருளுரைத்தல் சரியான முறையாகத் தோன்றவில்லை.கம்பனுடைய நோக்கினுக்கு இது முரணானது. தமிழ்ச் சான்றோர் மேலும் விளக்கினால் நன்று.

பேராசிரியர். அ.ச.ஞானசம்பந்தன் எழுதிய ‘கம்பன்-- ஒரு புதிய பார்வை’ என்ற நூலில் தாம் என்ற சொல்லை விடுத்து உள என்ற சொல்லை மாத்திரமே கொண்டு விளக்கமளிக்கப்படுகிறது. அவன் இல்லாதவைகளிலிருந்து உயிரிகளைப் படைக்கவில்லை. இதற்கு முன்னரே இருந்தவைகளிலிருந்துதான் உலகைப் படைத்தான் என்ற “தற்காரிய வாத“ க் கோட்ப்பாட்டினை வலியுறுத்துதற்காக இவ்விளக்கம் தரப்படுகிறது. அப்புத்தகத்தினைப் படித்த பின்னரே இச் சிந்தனை தோன்றியது.
( அன்னாமலப் பல்கலைக் கழகம், கோவை கம்பன் கழகம் இவர்களால் வெளியிடப்பட்ட இராமாயணப் பதிப்புகளில் இவ் விளக்கம் காணப் படவில்லை. )

21
மஹாத்மா காந்தியை இவ்வுலகமே ஏற்றுக் கொண்டிருக்கிறது; உலக மகாசபை அக்டோபர் 2ம் தேதியை உலக சமாதான நாளாக அறிவித்ததின் மூலம். அது போலவே திருக்குறளை உலகப் பொது மறையாக அறிவிக்கும் நாள் எதுவோ?
22
காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபொழுது அவர் மீது இராசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் மன்றத்தின் உள்ளே நுழையும்போது, அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்க வேண்டிய நீதியரசர் தம் இருக்கையிலிருந்து எழுந்து நின்று அடிகளாருக்கு வணக்கம் சொல்லுகிறார். இக்காட்சி சர் அட்டன்பரோ எடுத்த ”காந்தி” என்ற திரைப்படத்தில் வருகிறது.
நிறவெறி பிடித்தவர்களும், ஏகாதிபத்திய வாதிகளுமான பிரிட்டிஷ்காரர்களின் நீதியரசர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய விசாரணைக் கைதியை நோக்கி எழுந்து நின்று வணக்கம் கூறுவது நினைத்துப் பார்க்கவே இயலாத நிகழ்வு. அப்படி அவரை எழுந்து நிற்க வைத்தது எது? அடிகளாரின் கையில் துப்பாக்கி எதுவும் இருந்திருக்க இயலாது !
தஞ்சை மாவட்டத்தில், வலங்கைமான் என்ற குக்கிராமத்தில் ஏழைப்பிராமணக் குடும்பத்தில் பிறந்தவரான மகாகணம் சீநிவாச சாஸ்திரியார், ஆங்கிலப் பேரரசின், மன்னர்மன்னனின் "Privy council " அங்கத்தினராகவும் அப்பேரரசில் “ Rt. Honourable “ என்ற பட்டத்தைப் பெற்ற சிலரில் ஒருவராகவும், காங்கிரஸ் மகாசபையின் தலைவராகவும், கோகலேயின் இந்திய ஊழியர் சங்கத்தின் தென்னாட்டுத் தலைவருமாக இருந்து பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமாக இருந்தவர். ஒரு Privy council கூட்டத்தில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் “இந்தியர்கள் ('Fanatic') பேனடிக் என்று கூறியது தவறு என்று எடுத்துக்காட்டி அது ”பெனாடிக்”என்று உச்சரிக்கப்பட வேண்டும் என திருத்திக் காட்டினார். அரசவை அதனை ஒத்துக்கொண்டது. சாஸ்திரியாருக்கு அப்படிப்பட்ட தைரியத்தைக் கொடுத்தது எது?
சர்வமத மகாசபையில், சுவாமி விவேகானந்தர், ”எனது அன்பிற்குறிய சகோதர சகோதரிகளே” எனக்கூறி தனது பேச்சை ஆரம்பிக்கும்போதே, அமெரிக்கர்கள் எழுந்து நின்று கரஒலி செய்து மகிழ்ச்சியையும் மரியாதையையும் காட்டுவதர்க்குப் பின்னணியாய் இருந்தது எது?
இலண்டன் மாநகரில், பாரதீய வித்யாபவனத்தின் புதுக்கட்டிடத்தைக் கட்ட ஆரம்பிக்கும்போது, அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த மவுண்ட் பேட்டன் பிரபு, பழைய கட்டிடம் இடிக்கப்பட்டிருந்தாலும் அக்கட்டிடத்திற்கு நடப்பட்டிருந்த அடிக்கல் பழைய செய்திகளுடன் அகற்றப்படாமலே பெருந்தன்மையுடன் விட்டுவைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு மகிழ்ந்த, நெகிழ்ந்த, மவுண்ட் பேட்டன் “ இப்படிப்பட்ட பெருந்தன்மையை “என்னுடைய” இந்தியர்களைத் தவிர வேறு யாரிடம் காண இயலும்? ” எனக் கூறியிருக்கிறார். அப்படி அவரைக் கூறவைத்தது எது?
இந்தியா சுதந்திரமடைந்தபோது, பிரிட்டீஷ் கொடியை இறக்கிவிட்டு சுதந்திரக்கொடியை கம்பத்தில் ஏற்றத் தகுதியானவர் யார் என்று நேரு காந்தியைக் கேட்க, அதற்கு அவரை ”மவுண்ட் பேட்டனைத் தவிர யார் இருக்கிறார்கள்?” என்று கூற வைத்தது எது?
தமிழராகிய சென்பகராமன் பிள்ளை, கெய்செர், ஹிட்லெர் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர். நாஜிக்கட்சியில் சேர்ந்தவர். வெளியே இருந்துகொண்டே ப்ரிட்டிஷாரை நாட்டிலிருந்து வெளியேற்ற பாடுபட்டவர். ஒரு தடவை ஹிட்லெர் ”இந்தியர்கள் பிரிட்டீஷாருக்கு அடிமையாக இருக்கவே தகுந்தவர்கள்” என்று கூறியதை செண்பகராமன் கண்டித்து ஹிட்லெரிடமிருந்து மன்னிப்புக் கடிதம் பெற்றார். அப்படிப்பட்ட துணிச்சலை அவருக்குக் கொடுத்தது எது?
இப்படிப்பட்ட சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், பிறரும், இந்தியர்களுக்கு இவ்வளவு மரியாதை கொடுக்கவும், அந்த மரியாதைக்கு இந்தியர்களை தகுதியுள்ளவர்களாக ஆக்கவும் அடிப்படைக் காரணமாக இருந்தது-இருப்பது-இனிமேலும் இருக்கப் போவது, காலங்காலமாக இந்த மண்ணில் வாழ்ந்த மகான்களும், ரிஷிகளும் பெரியோர்களும் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் ஆன்ம பலமே.
23

இப்பிரபஞ்சத்தின் பகுப்பு சீவராசிகள்; சீவராசிகளின் தொகுப்பு இப்பிரபஞ்சம்.

தன்னை இப்பிரபஞ்சத்தின் பகுப்பாக (ஒரு சீவராசியாக)ப் பார்ப்பது வாணப்பிரஸ்தத்தில்; தன்னை சீவராசிகளின் தொகுப்பாக (பிரபஞ்சமாக)ப் பார்ப்பது சந்நியாச நிலையில்.
24

ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்க வேண்டிய செய்திகள் இரண்டு.

1. நான் யார்?
2.நான் என்ன செய்ய வேண்டும்?

இவற்றினுக்கு விடை:

1. பிரபஞ்சம் பூராவும் பரவி நிற்கும் மகா சக்தியில் நான் ஒரு துகள்.
2. எத்துணைப் பிறவி எடுப்பினும் அத்துணைப் பிறவியிலும்
என் கடன் பணிசெய்து கிடப்பதே.

அம்மகா சக்தியின் துகள்களாகிய நாம் ஒவ்வொருவரும்(அம்மகா சக்தியைப் போன்றே) ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியே, மலத் திரைகள் நம்மை மறைக்காதிருக்கும் வரை.

பணி செய்யும் மனம் கருணையின் விளைவு.

எனவே வள்ளலார் மனிதனுக்குத் தெரிந்திருக்க வேண்டிய இவ்விரண்டு
செய்திகளையும் மகா மந்திரமாக்கி,

“அருட் பெருஞ்சோதி”
”தனிப் பெருங்கருணை” என்றார்.

இதனையே மணிவாசகப் பெருமான்,

1.”ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி”,

2.”பெருங்கருணைப் பேராறு”

என்று இரு வரிகளில் கூறினார்.

வள்ளலாரின் வாய்ச் சொற்கள் மணிவாசகருக்குச் சொந்தமானவையே.

”ஆதியும்.........சோதி” என்பதனையும்,” “என்று நீ அன்று நான்” என்ற
தாயுமானாரின் வாக்கையும் இணைத்துப் படித்தால், நாமும் இறையே என்பது விளங்கும்.
25

'பிறவா வரம் வேண்டும் இறைவா' என்று நான் ஒரு போதும் இறைவனை வேண்டமாட்டேன். திரும்பத் திரும்பப் பிறக்க வேண்டும் என்றே கேட்பேன். ஆனால், தஞ்சை மண்ணில் தான் பிறக்க வேண்டும் என்று கேட்பேன்.

ஏனெனில்,

வள்ளலார் “ஈ என்று எனை ஒருவன் இரந்திட்ட போது இல்லை என்று சொல்லாமல் இடுகின்ற திறம் வேண்டும்” என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் வரம் கேட்கிறார். இக்கோட்பாட்டினைப் பின்பற்ற - உதவி கேட்டு வந்த அத்துனைப் பேருக்கும் உதவ ஒரு பிறவி போதாது - பல பிறவிகள் எடுத்தல் வேண்டும். அதுவும் அதே மண்ணில் திரும்பத் திரும்பப் பிறந்தால் தான் இயலும். எனது ஒரு பிறவியில் உதவி பெற முடியாமல் விட்டுப் போனவர்களுக்கு அடுத்த பிறவியிலாவது உதவ வேண்டும். எத்துனைப் பிறவி எடுப்பினும் அத்துனைப் பிறவியினும் ”என் கடன் பணி செய்து கிடப்பதே.”

பிறப்புக்களுக்கு அப்பாலே சென்று உடன்பிறப்புக்களுக்கு மறுபடி மறுபடி உதவி செய்தலால் ஒரு நாள் நான் சிவமாகிப் போவேன்.

அறியானாயிருந்த நான் அன்பே சிவமென்பதை அறிந்த பின் 'அன்பே சிவமாய் அமர்ந்திருப்பேன்.'
26

பேராசிரியர் சோ.ந.கந்தசாமி கூறுவார்;
”Sat, Sit, Anandam are the three Eternal Attributes of the Absolute.”
27

பேதங்கள்
வர்க்கபேதங்களற்ற சமூகத்தை உருவாக்க வேண்டுமென்பதே மார்க்சீயவாதிகளின் கோரிக்கை. அப்படியென்றால் என்ன?
பல வர்க்கங்களைக் கொண்டதே சமூகம். எனவே வர்க்கங்களற்ற சமூகம் என்று ஒன்றுமில்லை. துணிவெளுப்பவன் ,வக்கில் கணக்காயர், பொறியாளர், மருத்துவர் என்று பல துறைகளைச் ( வர்க்கங்களை ) சேர்ந்தவர்கள் சமூகத்தில் இருக்கும்வரை வர்க்கங்கள் இருந்தே தீரும். அதுபோலவே, ஒவ்வொரு வர்க்கமும் சமூகத்திற்காற்றவேண்டிய கடமைகளில் பேதங்களிருப்பதால், பேதங்களற்ற வர்க்கங்களும் இருக்க சாத்தியமில்லை.
எனவே பொது உடைமை வாதிகள், பேதங்கள் வாயிலாக ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தைச் சுரண்டுவதையே இப்படிக் குறிப்பிடுகிறார்கள் என்று கொள்ளலாம்.
பேதங்களற்ற சமூகமென்ற ஒன்றில்லையெனக் கண்டோம். அது மாத்திரமல்ல. பேதங்கள் மனித வாழ்க்கைக்கு சுவையூட்டுபவை. அவை நமக்கு முக்கியமான தேவை. அவை இல்லாத வழ்க்கையை நினைவுபடுத்திப் பார்ப்போம்.
ஒவ்வொரு நாளும் மாறுதலே (பேதங்களே) இல்லாமல் ஒரே வகையான சாப்பாட்டை சாப்பிட்டால், தஞ்சவூர்க்காரனின் ”நாக்கு செத்து”ப்போகும்.
பெண் குழந்தைகள் ஒரேமாதிரியான சீருடையே தினமும் அணிந்து பள்ளிக்கு வந்தால், பல நிறங்களில் ஆடையணிந்து பட்டாம்பூச்சிபோல் சிறகடித்து விளையாடும் அழகைக் காண இயலாது.
மின்கடத்தியான செம்புடன் ஒரு அழுக்கைக் (பேதத்தை)கலந்தால், “அரைவேக்காடு” செமி கடத்தி கிடைக்கிறது. இந்த செமி கண்டக்டர் இல்லையென்றால் மின்னணு இயலே கிடையாது. இருபத்தி ஓராம் நூற்றாண்டே கிடையாது.
“ஏழு சுரங்களில் எத்தனை ராகம்” என்பதொரு பாட்டு. இந்த ஏழு சுரங்களுடன் “சுரபேதங்களை”க் கலந்து, பதினாறு; இருபத்திரண்டு என்று அதிகப்படுத்தி உபயோகிக்கும்போது பல இனிய சங்கதிகளை உருவாக்க முடிகிறது. இந்த சுரபேதங்கள் இசைக்கு இனிமையூட்டுபவை.
மனிதவாழ்க்கையில் பேதங்களைக் கணக்கிலெடுக்காமல் வழங்கும் தீர்ப்பு நீதி. பேதங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு வழங்கும் தீர்ப்பு நியாயம்/தர்மம்.
நாம் பேதங்கள் இயற்கையாய் இருப்பதை உணரவேண்டும். அவற்றைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பிறரிடம் ஒற்றுமையய் வாழும் வழியைக் காண வேண்டும். இதைத்தானே ஆங்கிலத்தில் unity in diversity என்று கூறுகிறார்கள்.
மனிதர்களுக்கிடையே உள்ள பேதங்களைக் கணக்கிலெடுப்பதையே வள்ளுவர் ”இதனை இவன் முடிக்கும்..........” என்ற குறளில் கூறக் காண்கிறோம். பேதங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு அவரவருக்குரிய துறையையும், அத்துறையில் அவரவருக்குரிய நிலையையும் தீர்மானித்தே உலகம் முழுதும் அரசுத் துறையிலும் பொதுத்துறையிலும் அலுவலர்கள் நியமிக்கப் படுகிறார்கள். துறைகளை categories என்றும், நிலைகளை seniority/position என்றும் கூறுகிறார்கள்.Categories என்பது வர்ணங்கள் என்றும் seniority என்பது ஆசிரமம் என்றும் ஆகிறது. ஆகவே வர்னாச்ரம தத்துவம் உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது, ஏனெனில் இத் தத்துவம் பேதங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு அவரவரது திறமை, ஆற்றல் அனுபவம் இவற்றின் அடிப்படையில் செயல்படுகிறது.
மேலே கூறப்பட்ட குறளை நாம் ஒத்துக்கொண்டால், வர்ணாசிரம தத்துவத்தை ஒத்துக்கொண்டவர்களாகிறோம்.
வேதகாலத்தில், இந்த ஒரு ஒழுங்கான நெறி, ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக, திரிக்கப்பட்டு வர்ணாசிரம தர்மமாக செயல் படுத்தப்பட்டது. திறமை, விருப்பம், தகுதி இவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஆசிரம தத்துவம், திரிக்கப்பட்ட ஆசிரம தர்மமாக உருவாகியிருக்கிறதெனக்கொள்ளலாம். உலக மாந்தர் அனைவரும் இத்தத்துவத்தை பின்பற்றினார்கள். ஆனால் திரிக்கப்பட்ட தர்மத்தை ஒத்துக்கொள்ளவில்லை.

28.

திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யரிடம் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை யின் தமக்கை பாடம் கேட்டுக்கொண்டிருந்தபோது, அந்த சஹானா வர்ணம் முடிவடைந்தபின், அந்த வர்ணத்தை தன்னாலும் பாட இயலும் என்று நான்கு வயது ராஜரத்தினம் சொல்ல, வியப்படைந்த ஐயர் அவனைப் பாடச்சொல்ல, அவன் அதைப் பாடிக்காட்டினான். “குலவித்தை கல்லாமல் பாகம் பெறும்”
29

” யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் நிந்தன் செயல்களின்றி வேறில்லை “.

மேலே கண்ட வரிகளில் காணும் ‘தீது’ , ’நன்மை’இரண்டும் வாழ்வியல் கோட்பாடுகள்/உண்மைகள். இக்கோட்பாடுகளின்படி நடக்கும் செயற்பாடுகள் யாவும் “செயல்கள்” என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. இச்செயல்களைச் செய்ய சில வழிகள் உண்டு.

கோட்பாடுகள், செயல்பாடுகள், வழிகள் இவை யாவும் தானேயாகி, மேலும் இவற்றில் ஈடுபட்டிருக்கிற ஜீவராசிகளுமாகி  நிற்கிறாள் காளி என்பதே இப்பாடலின் பொருள்.
இதையே, Bible ல் “ Jesus said, ’I am the way, truth and life' ”( John 14:6 ) என்று கூறப்படுகிறது.                
 30
தமிழ் இனத்தின் தொண்மையையும், மேண்மையையும், அவர்களின் சமையற்கலையினை மட்டுமே ஆய்வு செய்தும் அறியலாம்.தமிழனின் சமையற்கலை உலகிலேயே உயர்ந்தது.


31

நாம் எப்படி வாழவேண்டும் என்பதை அறிந்து கொள்ள, நிறைய படிக்க வேண்டியதில்லை. நிரம்ப கேட்க வேண்டியதில்லை. அனுபவ அறிவும் தேவையில்லை.
சுற்றியிருக்கும் சூழலிலிருந்து நம்மைக் காத்துக் கொ
ண்டு, நாம் பிறராக வாழாமல், நாமாகவே வாழ்ந்தாலே போதுமானது.

ஏனெனில், மனித இனத்தின் இயல்பு கருணையும் மகிழ்ச்சியுமாம். இந்த இரண்டின் அடிப்படையில் வாழும் வாழ்க்கை நமக்கும் பிறர்க்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் வாழ்க்கையாகவே அமையும். அர்த்தமுள்ள வாழ்க்கையாகவே இருக்கும்.

கீழ்க்கண்ட வலை தளத்திற்குச் செல்லவும்..
www.thamizharnagarigam.com
32

அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகா சக்தியில் நானொரு துகள். பல கோடி நூறாயிரம் துகள்களின் தொகுப்பு இப்பிரபஞ்சம். பிரபஞ்சத்தின் பகுப்பு சீவராசிகள். இதுவே எனக்கும் இப்பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பு.

சீவராசிகள் என்ற சொல்லை எடுத்துவிட்டு மனிதர்கள் என்ற சொல்லைப் போட்டால் மேலே கண்ட வாசகம் எனக்கும் இவ்வுலகிற்குமான தொடர்பாகும்.

பல நாடுகளில் எனக்குக் குடியுரிமை கிடைத்தபோது அதைத் தவிர்த்து ” நான் ஒரு இந்தியனாகவே இறப்பேன் “ என்று சொன்னேன். இது எனக்கும் இந்தியாவிற்குமுள்ள தொடர்பைச் சுட்டும்.

தமிழ், தமிழ்நாடு, தமிழினம், தமிழ்ப்பண்பாடு இவையே உலகில் உயர்ந்தவை என்ற என் தீர்ப்பு எனக்கும் தமிழ் மாநிலத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும்.

” பச்சைப் பசேலென்ற வயல்கள், அவற்றினிடையே தோன்றும் தென்னை மரக்கூட்டம், அதன் நடுவிலே தோன்றும் கோபுரம், கோயிலுக்கருகே தோன்றும் தடாகம், அதில் காணும் அல்லியும் தாமரையும், கோயில் சுற்றில் அமர்ந்து திருமுறைகளை இசைக்கும் ஓதுவார், அந்த நாதத்தின் இனிமை, அந்த இனிமையிலே உள் நின்றியக்கும் ஆடவல்லான், அக்கோயிலோடு இணைந்திருக்கும் கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், இசை, கூத்து ஆகிய கலைகள், ஆடவல்லானிடம் விண்ணப்பிக்க வரும் மனிதக்கூட்டம் இவற்றையெல்லாம் விடுத்து சித்திரகுப்தனூடே யான் செல்லேன் “ எனக்கூறும் என் மனத்துணிவு எனக்கும் தஞ்சாவூருக்கும் உள்ள தொடர்பை விளக்கும்.

தஞ்சையிலிருந்து ஆரம்பித்து இப்பிரபஞ்சம் முழுமையும் நான் ஆக்கிரமித்து நிற்கிறேன். இப்பிரபஞ்சம் முழுமையும் எனக்குள்ளே விரவி நிற்கிறது. நானும் இப்பிரபஞ்சமும் வேறல்ல. நான் ஒரு பிரபஞ்சன்.

இப்போது “ மரணமிலாப் பெருவாழ்வு ” என்பது புரிகிறது. ” சாகாக்கலை “ என்பது ’கைவந்தகலை’ யாகிவிட்டது.  

Thursday, July 31, 2008

தஞ்சை மண்.

தஞ்சாவூர்.


காவேரியின் கடைமடைப் பகுதியில், ”சோணாடு சோறுடைத்து” என்றழைக்கப்பட்ட சோழவள நாட்டின் தலை நகராக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் இந்த ஊர் என்னுடைய சொந்த ஊர்.

இந்த ஊரைப்பற்றிய இக்கட்டுரை, ஒரு தொல்லியல் ஆய்வுக் கட்டுரையோ, சரித்திரக் கட்டுரையோ அல்லது இலக்கியக் கட்டுரையோ அன்று. இந்த ஊரிலே பிறந்து எழுபது ஆண்டுகளாய் வாழ்ந்துகொண்டிருக்கும், ஒரு முதிய குடிமகனின் எண்ணச் சிதறல்களே. இதில், சரித்திர உண்மைகள், தொல்லியல் துறை கண்டுபிடிப்புகள், இலக்கியச் செய்திகள் ஆகியவை ஆங்காங்கே காணப்படலாம். இதற்குமேல், கட்டுரையாசிரியனுடைய அனுமானங்களும் விரவிக் கிடக்கலாம்.

இந்த ஊர்க் காரர்களுக்குத், தங்கள் ஊரின் மீது மிகுந்த பற்று உண்டு. பெருமையுமுண்டு. வேற்றூர்க்காரர்கள், எங்கே தங்கள் ஊரைத் தஞ்சையினும் சிறந்த ஊராகக் கூறிவிடுவார்களோ என்றஞ்சியோ அல்லது தஞ்சையின் பெருமையை நினைத்து இருமாப்புடனோ, தமிழ் இலக்கணத்தில் உள்ள தேற்றேகாரத்தை உபயோகித்து,

தண்ணீருங் காவிரியே

தார் வேந்தன் சோழனே

மண்ணாவதும் சோழ மண்டலமே

என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறி வைத்தார்கள்.

தென்னாட்டவர்களின் ஆதிக்கம் தூரக்கிழக்கு நாடுகள் வரை பரவியிருந்தது தஞ்சையை ஆண்ட ராசராசன், மற்றும் அவன் மகன் ராசேந்திர சோழன் இவர்கள் காலத்திலேதான். அதாவது, தென்னிந்தியா முழுமைக்கும், மற்றும் தூரக்கிழக்கு நாடுகளுக்கும் தஞ்சாவூரே ஒரு வகையில் தலை நகர்.

( இந்த வகையான அரசாங்க அமைப்பு ஐரோப்பியர்கள் காலத்திலும் இருந்தது ஒரு வியப்பான செய்தி. ஆப்பிரிக்காவிலிருந்து தூரக்கிழக்கு நாடுகள் வரை, ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான நாடுகளுக்கு (British East India Company) சென்னை தலை நகராகவும், பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான நாடுகளுக்கு ( French East India Company )புதுச்சேரி தலை நகராகவும், போர்ச்சுக்கீசியர்களுக்குச் சொந்தமான நாடுகளுக்கு ( Portugese East India Company )கோவா தலை நகராகவும் இருந்திருக்கிறது. இது தென்னிந்தியாவுக்குக் கிடைத்த பெருமை. சிங்கப்பூரிலிருக்கும் தாவரவியல் பூங்கா கல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட தாவரவியல் நிபுணரால் ஏற்படுத்தப்பட்டது. சிங்கப்பூர் நகரம் முதன்முதலில் தென்னிந்திய தொழிலாளர்கள் மற்றும் அந்தமான் சிறைக் கைதிகளால் உண்டாக்கப்பட்டது. மலேசியாவின் இருப்புப் பாதை கட்டப்பட்டதில் இந்தியத் தமிழர்களுக்குப் பெரும் பங்குண்டு. இலங்கையின் தேயிலைத் தோட்டத் தொழில் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர்கள் தென்னிந்தியத் தமிழர்கள். யாழ்ப்பணத் தமிழர்கள் அன்றைய ஆங்கிலேய அரசுடன் நெருங்கியத் தொடர்புடனிருந்தும் இலங்கை சுதந்திரமடைந்தபோது இந்தத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குடியுரிமை கிடைக்காமல் போனது அவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அவமானமும் அவலமுமாகும்.)

தஞ்சாவூர் என்ற பெயரை அடைமொழியாகக் கொண்ட பல பெயர்கள் இன்றும் வழக்கில் இருக்கின்றன. அவை,

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை,
தஞ்சாவூர் தட்டு,
தஞ்சாவூர் ஓவியம்,
தஞ்சாவூர் பாணி இசை,
த்ஞ்சாவூர் பாணி நாட்டியம்.
தஞ்சாவூர் கதம்பம்,
தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர்,
தஞ்சை நால்வர் (பொன்னையா சின்னையா, வடிவேலு, சிவானந்தம் ),
தஞ்சை கலைக்கூடம்,
தஞ்சாவூர் சரசுவதி மகால், முதலியன.
இவை யாவும் தஞ்சையின் தனிச் சிறப்பை வலியுறுத்துவன.

இவைகளைப்போலவே,

மேற்கத்திய இசைக்கே உரித்தான வயலினைத் தமிழிசைக்கு ஏற்ப மாற்றியமைத்து முதன்முதலில் உபயோகித்தது தஞ்சையில்தான். இதைச் செய்தவர் தஞ்சை நால்வரில் ஒருவரான வடிவேலு. அதற்காக அவருக்கு ஒரு தந்தத்தால் ஆன வயலினைத் திருவாங்கூர் மகாராசா பரிசளித்திருக்கிறார். இப் பரிசு அவருடைய வாரிசுகளில் ஒருவரான சந்திரசேகர நட்டுவனாரிடம் (வீட்டு எண் 1818, மேல ராச வீதி, தஞ்சாவூர்) இன்றும் இருக்கிறது. இந்தக் காரியத்தைச் செய்தது சங்கீத மும்மூர்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் தம்பி பாலுசாமி தீட்சிதர் என ஒரு தவறான செய்தி உலாவி வருகிறது.

தஞ்சை நால்வர் தஞ்சையிலும், திருவனந்தபுரத்திலும் மைசூரிலும் அரசவைப் புலவர்களாக இருந்துள்ளனர்.

கிளாரினட் வாத்தியம் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது ( சிவானந்தம் )தஞ்சையில்தான்.
(வடிவேலுவுடன் திருவனந்தபுரம் சென்ற சுகந்தவல்லி என்ற நடன மாது (முதலியார்)சுவாதித் திருநாள் மஹாராஜாவுடன் நட்பு கொண்டு அவரின் இரண்டாவது மனைவியாக இருந்தார். சபையில் பரதத்தையும், மோஹினியாட்டத்தையும் பிரபலப் படுத்தியவர். ”தஞ்சாவூர் அம்மா வீடு” இன்னமும் திருவனந்தபுரத்தில் இருக்கிறது. இவரும் தஞ்சாவூர் ’அம்மாச்சி’யானார். கேரள அரசு சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, இழப்பீட்டுத் தொகை கொடுத்து இந்த வீட்டை எடுத்துக்கொண்டது.) ராஜா மிராசுதார் மருத்துவசாலைக்கருகில், வடமேற்கு மூலையில் இப்போதிருக்கும் (டிம்பர் டெபோ) இடம் மராத்திய மன்னர்கள் சிவானந்தத்திற்குக் கொடுத்த இடம். “நட்டுவன் சாவடி” என்று பெயர். நட்டுவன் என்ற பெயரைத் திருவனந்த புரத்திலும் உபயோகித்தார்கள்.


முதன் முதலில் 'பாண்டு வாத்திய'இசையை அறிமுகப்படுத்தியது தஞ்சைதான்.( ராசா சரபோசி)

'லாவணிக் கச்சேரியை'அறிமுகப்படுத்தியதும் தஞ்சையே.

'ஹரி கதா காலட்சேபம்'அறிமுகமானதும் இங்குதான். (மகாராஷ்டிராவிலிருந்து)

ராசா சரபோசி மேற்கத்திய, சித்த, ஆயுர்வேத, யுனானி வைத்திய முறைகளைக் கலந்து ( Integrated system of medicine) ஒரு புதிய வைத்திய முறையாக 'சரபேந்திரர் வைத்திய முறையை' உருவாக்கி, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் முதலான புலவர்களைக் கொண்டு பாடல்களாக வெளியிட்டு அதனைத் தனது 'தன்வந்திரி'மகாலில் உபயோகப் படுத்தியதும் இங்குதான்.

நாதசுரக்காரர்கள் 'இங்கிலீசு நோட்' வாசிக்க ஆரம்பித்ததும் இங்குதான்.( மதுரை பொன்னுசாமி, சேதுராமன் சகோதரர்களுக்குப் பொற்கிழி வழங்கப்பட்டபோது அவர்கள் பரிசு வழங்கிய மதுரை ஆதீனகர்த்தரிடம், “ ஐயா நோட்டுக்குக் காசாகக் கொடுக்கிறீர்களே ” என்று சிலேடையாகக் கேட்டதாக பேராசிரியர் அ. தட்சினாமூர்த்தி அவர்கள் கூறுவார்கள்.)

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”
“திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்”
என்ற கோட்பாடுகளுக்கிணங்க, சங்ககால இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பெருந்தொண்டாற்றி வருபவரும், அதனையே தனது

பேராசிரியர் முனைவர் அ. தட்சிணாமூர்த்தி.
வாழ்நாள் இலக்காகக் கொண்டு செயல்பட்டுவருபவருமான தமிழறிஞர், பேராசிரியர்  முனைவர் அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் இம்மண்ணைச் சேர்ந்தவரே.


மிகச்சிறந்த தொல்லியல் துறை அறிஞர், சரித்திர ஆசிரியர்,முனைவர்
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
குடவாயில் பால சுப்ரமணியன் இம்மண்ணைச் சேர்ந்தவரே.

முதன்முதலில், ஆங்கில ஆட்சியில்,Assistant Commissioner of Police ஆக உயர் பதவியில் அமர்ந்த இந்தியரும், FRHS, MRAS பட்டங்களைப்பெற்றவரும், Tamil Board of Studies at the university of Madras ஆக இருந்தவரும், Sheriff of Madras ( 1924 ) ஆக இருந்தவரும், Bhavanandam Academy for propagation of Tamil ஐ குன்னூரில் அமைத்தவருமான திருவாளர் திவான் பகதூர் சரவண பவாநந்தம் பிள்ளை இவ்வூர்க்காரர்.
திவான்பகதூர் சரவண பவாநந்தம் பிள்ளை - அரசுப்பணியில்.
இவர் ஒரு தமிழ் நாடகாசிரியர். மேலும் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிப் பதிப்பித்து நீலகிரி - குன்னூரில் தொல்காப்பியர்க்குச் சிலையெடுப்பித்து ஒரு நூல் நிலையத்தையும் ஏற்படுத்தியவர்.

மதுரையிலும், கரந்தையிலும் தமிழ்ச் சங்கங்கள் தோன்றுவதற்கு உறுதுணையாக இருந்தவரும் திருவாடுதுறை ஆதீனத்தால் புகழப்பட்ட சரசுவதி நூல்நிலையத்தையும், ஒரு மருத்துவ சாலையையும் அரித்துவாரமங்கலத்தில் ஏற்படுத்தியவரும், உ.வே.சாமினாதற்கு புறநானூற்றிற்குக் கிடைக்காத செய்திகளை கொடுத்துதவியவரும்,
கோபலசாமி ரெகுநாத ராஜாளியார்
கள்ளர் இனத்தைக் குற்ற பம்பரையினர் பட்டியலில் இருந்து ஐந்தாம் ஜார்ஜ் அரசரிடம் கூறி நீக்கச் செய்தவரும், அரசஞ்சண்முகனாரையும் நாட்டாரையும் புரந்தவருமான கோபாலசாமி ரெகுநாத ராசாளியார் இவ்வூர்க்காரர்.

தானே முழுதுணர்ந்து தண்டமிழில் பல நூல்களை எழுதியவரும்,

பண்டித,நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய நூல்களுக்கு உரை எழுதியவரும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உ.வே.சாவிற்குப்பின்னர் பேராசிரியராகப் பதவி வகித்தவருமாகிய நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இந்த மண்ணின் தவப்புதல்வர்.


நாவலர் நாட்டார் அவர்களின் கனவுகளை நனவாக்குவதையே தனது கடமையாகச் செயல்பட்டு, நாட்டார் திருவருட்கல்லூரியைத் தோற்றுவித்து,

பேராசிரியர் பி. விருத்தாசலனார்.
தாய் மொழியைச் செம்மொழி என அறிவிப்பதற்காக தளராது  உழைத்த பேராசிரியர் பி. விருத்தாசலனார் இம்மண்ணின் மைந்தர்.

சித்த மருத்துவத்துறைக்கு  அளப்பரிய தொண்டு செய்து மருத்துவ கலைச்

டி.வி.சாம்பசிவம் மன்னையார்
சொல் அகராதியை ( கலைக்களஞ்சியம் ) 6000க்கு மேற்பட்ட பக்கங்களில் எழுதி வெளியிட்ட டி.வி.சாம்பசிவ மன்னையார் இவ்வூர்க்காரர். இவரது மனைவியார் துரைக்கண்ணு அம்மாளின் தாய் மாமன் சரவணபவாநந்தம் பிள்ளை.

'கவுத்துவம்' என்ற நடன முறையை அறிமுகப்படுத்தியவர்கள் தஞ்சை நால்வர்.

கேரளக் 'கதக்களியை' பரத நாட்டியத்துடன் கலந்து 'மோகினியாட்டம்' என்ற முறையை அறிமுகப் படுத்தியவர்கள் இந்த நால்வருமே.

உலோகச் சிலைகளை வடிக்க ஆரம்பித்ததும் தஞ்சைத் தரணியே.

தமிழ் மொழிக்கென ஒரு தனிப் பல்கலைக்கழகம் இருப்பதும் தஞ்சையிலேதான்.

Scwartz பாதிரியார், தஞ்சையில் வந்து பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்தபோது, இந்தியவிலேயே முதன்முதலாக ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்பட்டது தஞசை செயிண்ட் பீட்டர் பள்ளியில்தான் என்று கூறப்படுகிறது.

பிலிப்ஸ் என்ற கிழக்கிந்திய கம்பெனியின் ரெசிடெண்ட், மராத்திய ராணி காமாட்சி பாயுடன் சண்டையிட்டு, கருவூலங்களைச் சூறையாடினான்.
சரசுவதி மஹால் நூல் நிலையத்தைக் கொள்ளையடிக்கத்திட்டமிட்டான். நார்டன் என்ற வக்கீல் உதவியுடன் செய்தி இங்கிலாந்திற்குச் சென்றது. ஆங்கில அரசு, கம்பெணி ரெசிடெண்டை நீக்கிவிட்டு தனது நேரடி நிர்வாகத்தில் முதன்முதலாக கலெக்டரை நியமித்தது. கம்பெனியின் கடைசி ரெசிடெண்ட் பிலிப்ஸ்; அரசின் முதல் கலெக்டர் கேடெல்.(கி.பி.1858)
ஆங்கில அரசின் நேரடி நிர்வாகத்திற்கு இந்தியா வந்ததுவும் தஞ்சையினால்தானோ?

( இந்த கேடல், பின்னர் வந்த அர்பத்நாட் இவ்விருவருமே தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டைக் கட்டியவர்கள். இந்த அங்காடி 150 வருடங்களாக நாதியற்றுக் கிடக்கிறது. )



Don Bosco பாதிரியார் முதன்முதலில் தன் கல்விப்பணியைத் தொடர்ந்தது தஞ்சையில்தான். சென்னையில் அல்ல.

Fusion என்றொரு செயல் குறித்து இப்போது பேசப்படுகிறது; மேற்கத்திய இசைக்கருவியைத் தமிழிசைக்கு உபயோகப்படுத்தியும், மேற்கத்திய மருத்துவத்தை தமிழ் மருத்துவத்துடன் இணைத்தும் இந்த Fusion அறிமுகப்படுத்தப்பட்டது தஞ்சாவூரில்தான்.

கோயிலில் ராசகோபுரைத்தைக் காட்டிலும் முழுமுதற்பொருள் உறையும் கருவறை விமானம் உயரமாக முதன்முதலில் கட்டப்பட்டதும் தஞ்சாவூரில்தான்.

ஐந்நூறு ஆண்டுகட்கு முன் மழை நீரை இருமுறை வடிகட்டித் தெளிந்த நீரைச் சுடுமண் குழாய்களின் மூலமாக, திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகர் மத்தியில் இருக்கும் குளங்களுக்கும்,கிணறுகளுக்கும் கொண்டு சென்று குடிநீர்த்திட்டத்தை அமல் படுத்தியதும் தஞ்சையே.

ஐந்நூறு ஆண்டுகட்கு முன் சாக்கடைத் திட்டத்தை, (மழை நீரை அகற்ற) நகரில் அமுல்படுத்தியது இங்குதான். அது இன்றுவரை செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.

தக்கையைக்கொண்டும், அதில் சந்தனத்தையும், மிளகு, நெல், கிராம்பு இவற்றை வைத்தும் மாலைகள் செய்யும் கலை பரிணமித்ததும் இவ்வூரிலேயே.

சூரியன் ஒருபோதும் மறையாத சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த ஆங்கிலேய மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் அரசவையில், ஆங்கிலச் சக்கரவர்த்தியின் "fanatic" என்ற சொல்லின் உச்சரிப்பு சரியல்ல என்று சொல்லி அதைத் திருத்தி உச்சரித்துக் காண்பித்த “silver tongued orator" Rt. Hon. சீநிவாச சாஸ்திரியார், இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்.

Thomas Hardy என்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கணிதவியல் பேரசிரியரால் வியந்து பாரட்டப்பட்டு, ராயல் கழகத்தில் (F.R.S.)சேர்த்துக்கொள்ளப்பட்ட உலகம் போற்றிய கணிதமேதை சீநிவாச ராமானுஜன் இம்மண்ணைச் சேர்ந்தவர்.

உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்பட்ட மர்லோன் ப்ரண்டோவால் ”என்னால் சிவாஜி கனேசனைப்போல் நடிக்க முடியாது” என்று போற்றப்பட்ட செவாலியே சிவாஜி கனேசன் பிறந்தது இம்மண்ணில் தான்.

தான் ஒருவராக, தனிமையில் செயல்பட்டு, ஏழு முறை, தொடர்ந்து
( இரண்டு)அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சையில் நடத்தியவரும், மிகப்பெரும் சித்த வைத்தியரும், மிகப்பெரிய சோதிட சாத்திர வல்லுநரும்,அகில இந்திய அமெச்சூர் புகைப்படக்கலைக் கழகத் தந்தையும்,கிறித்துவ சமயத்தைப்பற்றி ஆராய்ச்சி நூல் எழுதியவரும்,பெரிய வேளாண்விஞ்ஞானியுமாகிய, ”கருணாமிருத சாகரம்“ என்ற இசை நூலை எழுதி, பண்டைய தமிழிசையே இன்றைய கருநாடக சங்கீதம் என்று நிறுவிய தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் வாழ்ந்தது இம்மண்ணிலேதான்.அவர் தோற்றுவித்ததுதான் தஞாவூர் சங்கீத வித்யா மஹாஜன சங்கம்.

அவரது கருனாமிருத வைத்யசாலையில் செய்யப்பட்ட மருந்துகளை பட்டுவாடா செய்வதற்கெனவே தஞ்சைத் தலைமை அஞ்சலகத்தில் ஒரு தனி கௌண்டரே இருந்திருக்கிறது.

தஞ்சைக்கலைக்கூடத்தைத் தோற்றுவித்தவர், மிகப்பெரிய தமிழறிஞரும், எழுத்தாளரும், சிறந்த கலாரசிகரும், I.A.S அதிகாரியும்,சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முற்போக்கு எழுத்தாளரான தொ.மு.சி.ரகுநாதனின் அண்ணனுமான, திரு.தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானாவார். இவரது நூல்கள் 2009ல் நாட்டுடைமையாக்கப்பட்டன.
தொண்டைமான்   மனைவி பாலம்மாவுடன்
இவர் தஞ்சையில் டெபுடி கலெக்டராக இருந்தபோழ்து, தஞ்சையைச்சுற்றிலும் ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் கேட்பாரின்றிக் கிடந்த கற்சிலைகளையும், செப்புப் படிமங்களையும் அவரோடு தாசில்தாராக வேலை பார்த்த திரு ராமச்சந்திர பத்தர் அவர்களின் உதவியுடன், தஞ்சை அரண்மனைக்குக் கொண்டுவந்து இக்கலைக்கூடத்தைப் படைத்தார். இப்படி முதன்முதலில் கொண்டுவரப்பட்ட சிலை பிரம்மா(?)வின் சிலை. " படைப்புக்கடவுளான பிரம்மா, தொண்டைமானுக்குக் கலைக்கூடத்தைப்படைக்க உதவினார் போலும். " என்று தொண்டைமானுடைய நண்பர்கள் கூறுவார்கள். ஆனால், திரு. குடவாயில் பாலசுப்ரமணியன், அச்சிலை வாகீச சிவனாரின் சிலை என்று தனது ’ராசராசேச்சர’த்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொண்டைமானுடைய இலக்கிய அறிவு அவர் ஒவ்வொரு சிலைக்குக் கீழே எழுதி வைத்த குறிப்புக்களிலிருந்து தெரியவரும்.

அவையாவன:

”காதல் தெய்வம் காமனுமே காதலி ரதியுடன் தேரேறி காதலை வளர்க்க விரைகின்றான்; இனி வேதனையுறுபவர் எத்தனையோ”--ரதி மன்மதன் சிலை.

”உலகம் உவப்ப வலனேர்பு திரி தரு பலர் புகழ் ஞாயிறு”--சூரியனார் சிலை.

“பங்கயக் கண்ணன்”--திருமால் சிலை

“மலர்மகள் கொழுநன்”--திருமால் சிலை.

“நீல மேனி நெடியோன்”--திருமால் சிலை.

“வென்றாடு திருத்தாதை வியந்து கை துடி கொட்ட நின்றாடு மழ களிறு”--நர்த்தன விநாயகர் சிலை.

”என்றுமுள தென் தமிழை இயம்பி இசை கொண்டான்.”--அகத்தியர் சிலை.

“தன்னையுந்தாங்கலாதார் துகிலொன்றுந்தாங்கி நின்றார்”- அழகிய நங்கையின் சிலை.
இந்த பாடல்கள் பொறிக்கப்பட்ட பலகைகளை கலைக்கூடத்தினர் எடுத்தெறிந்துவிட்டனர். என்னே மடத்தனம்?


‘சதிர்' என்ற பெயரில், 'தேவதாசிகள்' என்ற ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே ஆடப்பட்டு வந்த நாட்டியத்தை ”பரத நாட்டியம்”என்ற பெயரில் எல்லோரும் ஆட வழிவகுத்தவர்கள் தஞ்சை நால்வரே.
இவர்கள் பரம்பரையில், பின்னர் வந்த பந்தனை நல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் நடனம் பயின்ற திருமதி. ருக்மினி தேவி (சென்னை சங்கீத அகாடமியைத் தோற்றுவித்தவரும் வழக்கறிஞருமான திரு E.கிருஷ்னய்யர் அவர்களின் விருப்பப்படி) தன்னுடைய 'கலா சேத்ராவின்' மூலம் இந்நல்வழியைத் தொடர்ந்தார்.

இப்பெருமை தஞ்சையைச் சாரும்.

தஞ்சாவூரில்
நெல் மாத்திரம் விளைவதில்லை. இவ்வூரில் நெல்லோடு சேர்ந்து, காவிரி நீரின் வளப்பத்தினால், இசையும், நாட்டியமும், ஏனைய நுண் கலைகளும் விளைந்துகொண்டிருக்கிறது காலங் காலமாக. பண்டைய தமிழிசையே இன்றைய கருநாடக சங்கீதம். 'அன்றை நற்றமிழ்க் கூத்து'த்தான் இன்றைய பரத நாட்டியம். சிறந்த இசைப் புலவர்களில் எண்பது விழுக்காடு தஞ்சை மண்ணைச் சார்ந்தவர்களே. நாட்டியத்தில், நூறு விழுக்காடு. நூறு ஆண்டுகளாக பரத நாட்டியத்தைக் காப்பற்றியவர்கள் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்களே. ஆயினும் அவர்களுக்கு ஆசானாக அமர்ந்தவர்கள் அனைவருமே இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. இது போலவே கருநாடக சங்கீதத்தை சனரஞ்சகமான இசையாகக் காப்பாற்றி வருபவர்கள் பெரும்பாலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே. (தொடர்ந்து தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் மிகுதியாகப் பாடி வருவதும், சரியான தமிழ் உச்சரிப்பு இல்லாமல் பாடுவதும் இவர்களிடமுள்ள குறை.) ஆயினும், தமிழிசை தொடர்பறுந்து போகாமல் பாடி வருபவர்கள் கோயில்களில் பாடி வரும் ஓதுவார்களும், இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த நாதசுரக்காரர்களுமே. சங்க இலக்கியத்தில் கூறப்படும் பாணர்களும் விறலியர்களும் இந்த இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானோ?

இசை வேளாளர் குடும்பங்கள் மிகுதியாகக் காணப்படுவது தஞ்சை மண்ணில் தான்.

தஞ்சாவூருக்குப் பெருமை சேர்க்கும் இந்து கோயிலாகிய பெரிய கோயிலைப் போலவே இம்மண்ணிற்குப் பெருமை சேர்ப்பவை இஸ்லாமிய நாகூர் தர்காவும், கிறித்தவ வேளாங்கண்ணி மாதா கோயிலுமாகும்.

நவ கிரகங்களுக்குக் கோயில்கள் இருப்பதும் இம்மண்ணில் தான்.

சரஸ்வதிக்குக் கோயில் இருப்பது இம்மண்ணில்தான்.

காற்பந்தாட்டத்தில் இரு ஒலிம்பிக் (Olympians) வீரர்களைக் கொண்டது தஞ்சாவூர். அவர்கள் கேப்டன். கிருஷ்ணசாமி ( கிட்டு )யும், வீரர் சைமன் சுந்தர ராசனு (எனது பள்ளித் தோழர் )மாவர். இவர்கள் கலியாண சுந்தரம் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

கிட்டுவைப் பற்றி தமிழாசிரியர் சேஷாத்திரி சர்மா இயற்றிய பாடல்:-

வேகமிக யூகமிக .................க
மாகாற்பந்தாட வலனெனவே -வாகை பெறு
நம் கிட்டுவைக் கிட்ட இங்கிட்டு மங்கிட்டு
மெங் கிட்டு மில்லை யெவரும்.
(இப்பாடலில் எனது குறைபட்ட நினைவாற்றலால் தவறுகள் உள்ளன)

தஞ்சாவூர் மாவட்ட வாரியம், முதன்முதலில் இருப்புப் பாதை போட்டது இந்த மண்ணில்தான். இது மயிலாடுதுறையிலிருந்து முத்துப்பேட்டைக்குப் போடப்பட்டது ( கி.பி.1878ல் )

ஆங்கில ஆட்சியில், ஒரு மாவட்ட வாரியம் ( District Board ) தன்னுடைய வருமானத்திலிருந்து ஒரு இருப்புப் பாதை போக்குவரத்தை நடத்தியது தஞ்சாவூரில்தான். இந்த செயலை முன்னோடியாக எடுத்துக்கொண்டு இந்தியாவின் எல்லா மாவட்டங்களும் பின்பற்ற வேண்டுமென்று ஆங்கில அரசு ஆணையிட்டது.

The great southern of India Railway முதன்முதலில் போட்ட இருப்புப் பாதை தஞ்சாவூருக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலேதான். (கி.பி.1861ல்)

ஜமீந்தார்களும், குறுநில மன்னர்களும் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், எந்த பெருநிலக்கிழாருக்கும் விலைபோகாமல் தன்னை என்றுமே நாதசுரச் சக்கரவர்த்தி என்றே அழைத்துக்கொண்ட திருவாவடுதுறை வித்வான் ராஜரத்தினம் பிள்ளை, சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமான பிரிட்டீஷ் அரச சபையில் எலிசபெத் அரசியின் முடிசூட்டும் விழாவில் நாதசுரம் வாசித்துத் தன்னை சக்கரவர்த்தி என்று நிரூபித்தவர். அவர் இந்த மண்ணின் மைந்தன்.

ஏழிசை மன்னர் தியாகரஜ பாகவதர் மயிலாடுதுறைக்காரர்.

மதுரை சோமு என்றழைக்கப்பட்டாலும் அவர் தஞ்சவூர்க்காரரே.

இசையரசு தண்டபாணி தேசிகர் திருச்செங்காட்டங்குடிக்காரர்.

ருக்மினிதேவி அருண்டேல் திருவையாற்றுக்காரர்.



இந்த மண்ணின் பெருமையால் ஈர்க்கப்பட்டு, வேறொரு மாநிலத்திலிருந்து வந்து நாதசுரத்தைக் கற்றுக்கொண்டு தமிழ் மண்ணில் வித்வானாகத் தடம் பதித்தவர் தெலுங்கரான ஷேக் சின்ன மவுலானா.

இது போலவே, ஜான் ஹிக்கின்ஸ் என்ற அமெரிக்கர், இந்த மண்ணில் வளர்ந்த கருநாடக இசையை இங்கு வந்து கற்று “ கா வா வா. கந்தா வா வா” என்று பாடிப் புகழ் பெற்று ஜான் ஹிக்கின்ஸ் பாகவதர் ஆனார்..



தஞ்சை நகரம்.

ஏறக்குறைய, கி,பி,1218 முதல் கி.பி.1535 வரையிலான, முந்நூறு (317) ஆண்டுகட்கு தஞ்சை என்ற ஊரே கிடையாது என்ற சரித்திரச் செய்தி பலருக்குத் தெரியாதிருக்கலாம்.

சோழ சாம்ராஜ்யம் வலுவிழந்த போது, பாண்டிய மன்னன் தஞ்சாவூரின் மீது படையெடுத்து, நகரை அழித்து, எரித்து, அதன் சாம்பலை நகர் முழுதும் தூவி கழுதையைக் கொண்டு உழுது, வரகைத் தெளித்துத் தரை மட்டமாக்கித் தன் வஞ்சினத்தைத் தீர்த்துக்கொண்டான். பெரிய கோயிலை மாத்திரம் அழிக்காமல் விட்டுவிட்டான்,

நூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ( 1343 ல்), பாண்டிய மன்னர்களின் பிரதிநிதியாகிய சாமந்த நாராயணத் தொண்டைமான் என்பவன், சாமந்த நாராயணச் சதுர்வேதி மங்கலம் என்ற ஊரையும் ( இன்றைய கொண்டிராஜ பாளையம்), சாமந்த நாராயண விண்ணகரம் என்ற யோக நரசிம்மப் பெருமாள் கோயிலையும், சாமந்த நாராயணன் குளம்(சாமந்தாங்குளம்) என்ற குளத்தையும் வெட்டி தஞ்சாவூரை மறுபடியும் ஏற்படுத்தினான். ( குடவாயில் பால சுப்ரமணியன்)

பின்னர் வந்த செவ்வப்ப நாயக்கன், அவன் மகன் அச்சுதப்ப நாயக்கன் ஆகிய இருவரும் தஞ்சை அரண்மனையையும், நகரையும், கோட்டைச் சுவர்களையும், அகழியையும் அமைத்து இன்றைய தஞ்சையை அமைத்தார்கள்.

நகரக் கோட்டையையும், ராசராசேசுரத்தைச் சுற்றிய கோட்டையையும் இணைத்துப் பார்த்தால், இக்கோட்டை ஒரு கருடனைப்போல் தோற்றமளிக் குமாதலால், இக்கோட்டைக்குக் கருடக் கோட்டை என்னும் பெயர் உண்டென்றும்,ஆதலால்,கருடக்கோட்டைக்குள்ளிருப்பவர்களைப் பாம்பு தீண்டினால், விடம் ஏறாது என்றும், ஒரு பாடலைப்பாடினால், விடம் இறங்கி விடும் என்றும் ஐதீகம் உண்டு. (எனது தமிழாசிரியர் கற்பித்த அப்பாடலை நான் மறந்துவிட்டேன்.)

கீழவாசலும் வடக்குவாசலும்.

தஞ்சைக்கு மேற்கேயும், தெற்கேயும் 'மானம்பார்த்த' பூமியாதலால், விளை நிலங்கள் அங்கில்லை. அவை வடக்கேயும் கிழக்கேயுந்தான் உள்ளன. ஆகவே, அரண்மனைக்கும் வெளியுலகிற்கும் இருந்த தொடர்பு (பெரும்பாலும்) தஞாவூருக்குக் கிழக்கேயும் வடக்கேயும் உள்ள பகுதிகளுடன்தான்.விவசாயப்பொருள்கள் யாவும் நகருக்குக் கிழக்கேயிருந்தும் வடக்கே யிருந்தும்தான் வரவேண்டும். தவிர கீழவாசல், வடக்குவாசல் என்ற இரு புற நகர்ப் பகுதிகள் இன்றும் உள்ளன. கீழ வீதியிலிருந்து நேர் கிழக்கே நாகப்பட்டிணம் வரை ஒரு பெரு வழியும், வடக்கு வீதியிலிருந்து நேர் வடக்கே திருவையாறு, குடந்தை வழியாக ஒரு பெரு வழியும் ( கோடி வனமுடையாள் பெரு வழி-பண்டைக்காலப்பெயர் ) இருக்கிறது. ஒவ்வொரு புறநகர்ப் பகுதியிலும் ஒரு காய் கறி 'மார்க்கெட்'டும் ஒரு நெல்லுமண்டித் தெருவும் இன்றும் இருக்கின்றன. கீழவாசலில் ஒரு பெரிய அரிசிக்காரத்தெருவும் ஒரு சின்ன அரிசிக்காரத்தெருவும் உள்ளன. வடக்கு வாசலிலும் அரிசிக்காரத்தெரு உண்டு. மேலும், நெல்லிலிருந்து அரிசியெடுக்கும் இயந்திரங்கள் கீழவாசலிலும் கரந்தையிலுந்தான் இருக்கினறன.
எனவே கோட்டைக்கு வடக்கு வாசலும், கீழவாசலும் மட்டுமே பிரதான வாசல்களாக உள்ளன. மேற்கிலும், தெற்கிலும் அப்படியேதும் சிறப்பான அமைப்புக்களில்லை.

நெல்லை சேமித்து வைக்க மிகப்பெரிய களஞ்சியம் ஒன்று மேல வீதியில், கலியான சுந்தரம் உயர் நிலைப் பள்ளியின் விளையாட்டுத்திடலினுள்ளே - களஞ்சியம் சந்தில்- இன்றும் இருக்கிறது. (Interesting enough to the department of civil supplies ) இவ்வளவு பெரிய களஞ்சியம் இருப்பது தஞ்சையில்தான்.


தஞ்சை அரண்மனைக்கென ஒரு மதில் சுவரும், சுவற்றுக்கு வெளியே குடியிருப்புக்களையும், அரண்மனையையும் உள்ளடக்கி ஒரு கோட்டை சுவரும், உள்ளன. இதனைப் போன்றே, ராசராசேச்சுரத்தைச் சுற்றி ஒரு மதில் சுவரும், கோயிலையும் குளத்தையும், பூங்காவையும் உள்ளடக்கி ஒரு கோட்டை சுவரும், உள்ளன. இவ்விரு கோட்டை சுவர்களையும் உள்ளடக்கியது நீர் அரணாகிய அகழி. எனவே, அகழி ஒரு பெரு வட்டம். அதனுள்ளே இரு சிறு வட்டங்கள். ஒரு சிறு வட்டம் இத்தரணி முழுமைக்கும் நாயகனாகிய 'கோ'வின் இல்லை உள்ளடக்கியது. அடுத்த சிறு வட்டம் தஞ்சைத் தரணிக்குக் 'கோ'வாகிய நாய(க்)கனுக்கான இல் ஐ உள்ளடக்கியது.. ( Civil Engineers, Architects and Town planners to note). இப்படியொரு அமைப்பு வேறெங்கும் இல்லை.

வல்லத்திலிருந்து தெற்கு நோக்கிச் சென்றிருக்க வேண்டிய புதாற்றை வேண்டுமென்றே வடக்கே திருப்பி, ராஜராசேச்வரத்தின் தெற்குப் பக்க அகழி வழியாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். ( தலைமைப் பொறியாளர் திரு. நரசிம்ம ஐய்யங்கார் அவர்கள் ) இதனால், கோயில் ஆற்றின் கரையில் அழகாக அமைந்துவிட்டது. ஆற்றின் கரையில் கோயில் கட்டுவது வழக்கம். ஆயிரம் வருடங்களுக்குப்பின், முன்னரே கட்டப்பட்ட கோயிலுக்கருகே ஆறு வெட்டுவது தஞ்சையில் மாத்திரமே நடக்கக்கூடிய அதிசயம். ராசராசேச்சுரதின் மேன்மை அப்படி.

தஞ்சை அரண்மனையும், கீழவாசல், மற்றும் வடக்குவாசல் புறநகர்ப் பகுதிகளும் கொண்டது பழைய தஞ்சை. பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை ஆங்கிலேயர் காலத் தஞ்சை. வ.உ.சி. நகருக்குத் தெற்கே இருப்பதும், கோயிலுக்கு மேற்கே இருப்பதும் புதிய தஞ்சை.

கோட்டைக்குள்ளே மந்திரிப் பிரதானியருக்கான உதவியாளர்களும், வடக்குவாசல் கீழவாசல் முதலான இடங்களில் எல்லோருக்குமான வேலையாட்களும் வசித்து வந்திருக்க வேண்டும். (ஐயங்கடைத்தெருவும், காசுக்கடைத்தெருவும் வணிக வளாகமாக இருந்திருத்தல் வேண்டும். ) கீழவாசலில் இருக்கும் தெருக்களின் பெயர்களைப் பார்த்தால், இது விளங்கும். அப்பெயர்கள்:-

துரோபதையம்மன் கோயில் தெரு, வைக்கோல் காரத் தெரு, வார்காரத் தெரு, ஒட்டக்காரத் தெரு, கயிற்றுக்காரத் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, நெல்லுமண்டித்தெரு, அரிசிக்காரத்தெரு, ஆட்டுமந்தைத்தெரு, பாம்பாட்டித்தெரு, குறும்பர் தெரு, சைவாள் தெரு,பில்லுக்காரத் தெரு
குயவர் தெரு, யாதவர் தெரு, கொள்ளுப் பேட்டைத் தெரு, பட்டு நூல்காரத் தெரு, கீரைக்காரத்தெரு,வண்டிக்காரத் தெரு, பூக்காரத்தெரு முதலியன.

ஒட்டக்காரத்தெருஎன்பது ஓடக்காரத்தெரு என்றிருந்திருக்கலாம். ஏனெனில், இத்தெரு வடவாற்றின் தென் கரையில் உள்ளது; மேலும் இத்தெரு கயற்றுக்காரத்தெரு, வார்க்காரத்தெரு இவற்றின் பக்கத்துத்தெரு. ஆகவே இத்தெரு தஞ்சையிலிருந்து கரந்தை செல்லுபவர்களுக்குச் சாதகமாக ஓடம் செலுத்தியவர்கள் வாழ்ந்த தெருவாக இருந்திருக்கலாம். ஓடம் கட்டுபவர்களுக்குத் தேவையான கயிறு மற்றும் வார்கள் பக்கத்துத் தெருக்களில் செய்யப்பட்டிருக்கலாம். கும்பகோணத்திலும், மதுரையிலும் “ஓடம்போக்கி” என்ற பெயர் இருப்பது கவனத்திற்குரியது.

வடவாற்றின் தென் கரையில் மேற்கே இருந்து கிழக்குக் கோடி வரை சோலைகளும் நந்தவனங்களுமாக இருந்திருக்க வேண்டும். இக்கருத்துக்கு சாதகமான பெயர்களாக இருப்பவை:

வம்புலாஞ்சோலை,பாலோபாநந்தவனம், அம்மாத்தோட்டம், சர்க்கிள் தோட்டம், அரண்மனைத்தோட்டம், பாப்பாத்தியம்மாள் தோட்டம் என்ற பெயர்களாகும். அரண்மனைத் தோட்டம் கயற்றுக்காரத் தெருவிலிருந்து சுண்ணாம்புக்காரத்தெரு வரையிலும்; ஓடக்காரத்தெருவிலிருந்து டபீர் குளம் ரோடு வரை இருந்தது. நாற்பது அடி விட்டம் கொண்ட கிணறு இத்தோட்டத்தில் இருந்தது. 1970 வரை இந்தத்தோட்டம் முழுமையிலும் மல்லிகை விளைந்தது. இந்தத் தோட்டம் இலங்கையில் அமைச்சராக இருந்த திரு. நடேசப் பிள்ளை என்பவரின் சொத்தாக இருந்து பின்னர் வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டது.

தஞ்சாவூர் நகரத்தின் கீழ்க்கோடியில், வடவாற்றின் தென் கரையிலிருந்து பெரிய சாலைத்தெரு அல்லது ராமேச்வரம் சாலை வழியே அரிசிக்காரத்தெருவிற்குப் போகும் வழியில் வெள்ளைக்காரன் குளமும், டபீர் குளமும் இருந்தன. அரண்மனையோடு தொடர்புடைய டபீர் பண்டிதரின் பெயரைக் ( குடவாயில் பாலசுப்ரமணியன் ) கொண்டதாக டபீர் குளம் இருந்திருக்கலாம். டபீர் குளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வீடுகள் கட்டப்ப்பட்டுவிட்டன. இதைப்போலவே ஹரி என்ற பண்டிதரின் பெயரைக்கொண்ட ஹரிபண்டிதர் குளமும் காணாமல் போய்விட்டது,
கரையோரத்தில் இருந்த உப்பரிகை பங்களாவைக் கொண்டு நோக்கும்போது வெள்ளைக்காரன் குளம் காற்று வாங்கப்போகும் இடமாக இருந்திருக்கலாம். . வெள்ளைக்காரன் குளம் ஒரு சிறிய குட்டையாக மாறியுள்ளது.

டபீர் குளத்தைப்போலவே மராத்திய மன்னர்களின் சேனையிலிருந்த மானோஜியின் பெயரைக்கொண்டிருப்பது, கோட்டைக்கு மேற்கேயுள்ள மானோஜிப்பட்டி (மானோஜிப் பட்டியில் இன்றும் ஒரு உப்பரிகை மாளிகை இருக்கிறது )யும், மானோஜியப்பா வீதியும்.

மராத்தியர்கள் தமிழகத்திற்கு வந்து இங்கேயே தங்கி வாழ ஆரம்பித்தவுடன் மராத்திய வார்த்தைகளுடன் தமிழ் வார்த்தைகள் ஒட்டிக்கொண்டன.

உதாரணமாக,

மாமா சாகேப் மூலை; அப்ஜண்ணா வட்டாரம்; ராணியக்கா சந்து; மேஹ்தே ராவ் அப்பாசாவடி (மோத்தரப்பா சாவடி) ,மானோஜியப்பா சந்து முதலியன.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டும் விழா ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டது, தஞ்சை மணிக்கூண்டும் அதன் பக்கத்திலேயிருந்த வளைவும். இது போலவே, புதாற்றுப் பாலத்தினருகில், கோர்ட் சாலை ஆரம்பத்தில் ஒரு war memorial இருந்தது. இதில் முதல் உலக மகா யுத்தத்தில் இறந்த தஞ்சை வீரர்களின்
பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. தஞ்சைக்கோட்டையின் கீழவாசல் 1960-70 வரை சிதையாமல் இருந்தது. பெரிய லாரி நுழைந்து போகுமளவுக்கு அகலமாகவும், இரு பக்கங்களிலும் நான்கு நான்கு அறைகளைக்கொண்டதாகவும் இருந்தது. ஒவ்வொவ்வொரு அறையிலும் ஒரு யாணையைக்கட்டலாம்.

இந்த மணிக்கூண்டுவளைவும், war memorial ம், கீழவாசலும் முன் யோசனையின்றி மூர்க்கத்தனமாக இடிக்கப்பட்டன.

தஞ்சைக்குப் பெருமை சேர்த்த குடும்பங்களில் மிக முக்கியமான குடும்பங்கள் இரண்டு. ஒன்று, தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் குடும்பம். மற்றொன்று யாகப்ப நாடார் குடும்பம்.
ஆபிரகாம் பண்டிதர் தஞ்சைக்கு ஆற்றியிருக்கும் தொண்டு அளவிடர்க்கரியது. அவர் ஆறு முறை அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சையில் கூட்டியிருக்கிறார். அவர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்னும் இசையாராய்ச்சி நூல் காலா காலத்திர்க்கும் தமிழனுக்குப் பெருமை சேர்ப்பது. கருணாநிதி வைத்திய சாலையில் வழங்கப்பட்ட மருந்துகளை பட்டுவாடா செய்வதர்க்காகவே தஞ்சாவூர் தலைமைத் தபால் நிலையத்தில் ஒரு தனி அலுவலரும் அலுவலகமும் செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது. சூடான பிரதேசத்தில் விளையாத பயிர்களையும் அவரது தோட்டத்தில் விளைவித்த பாங்கினை ஆங்கிலேய கவர்னர்கள் மிகப் பாராட்டி எழுதி வைத்திருக்கிறார்கள். அவர் சோதிடத்திலும் வல்லவர். எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களை பன்னிரண்டு ராசிச் சக்கரத்தோடு இணைத்து ஆய்வு செய்திருக்கிறார். காற்றாலையைக் கொண்டு தஞ்சையில் முதன்முதலில் தண்ணீர் இறைத்து பயிர் செய்தது இவரே. தஞ்சையில் முதன்முதலில் அச்சியந்திர சாலை நிறுவியவர் இவரே ( லாலி அச்சியந்திர சாலை).
யாகப்ப நாடார் அவர்களது புத்திரராகிய திரு. அருளானந்த நாடார் ”முத்தமிழ் வள்ளல்” எனப் பெயர் பெற்றவர். அவரது தம்பி பரிசுத்த நாடாரும் அவ்வாறே. பரிசுத்த நாடார் கொடுத்த நிலத்தில்தான் தஞ்சை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் டயோசீஸ் ஆரம்பிக்கப்பட்டது. அவர் ரோடரி சங்கத்தில் இருந்த போதுதான் ராஜா சரபோஜி கல்லூரிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. பொது மக்கள் குளிக்கவும் குடிக்கவும் தண்ணீ்ர்ப் பந்தல்களும் தொட்டிகளும் நகரின் பல பகுதிகளில் கட்டப்பட்டன.

பார்னெல் என்ற ஆங்கில எழுத்தாளரது ஹெர்மிட் என்ற கவிதையை சி.ராமச்சந்திர அய்யர் என்ற வழக்கறிஞர் 1904ல் வெளியிடப்பட்டிருக்கிறார். இது தஞ்சையில் இருந்த கலியாணசுந்தரம் முத்திரா சாலையில் அச்சிடப்பட்டு ஜி. எஸ். மணியா அண்ட் கோ என்ற வெளியீட்டாளரால் வெளியிடப்பட்டிருக்கிறது. வியப்பூட்டும் செய்தி.




தயவு செய்து கீழ்க்கண்ட வலை தளத்திற்குச் செல்லவும்

www.thamizharnagarigam.com